இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 7 பேர் வியாழக்கிழமை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 98 மீன்பிடிப் படகுகள் சிறைப்பிடிக்கப்படட்டுள்ளது. இதனால், ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நமது மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ள என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகவும், பாக்ஜலசந்திப் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்குத் தொடர்ச்சியான அச்சுறுத்தலாகும் என கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாம் | தொழில்நுட்பங்களின் உதவியுடன் வாடிக்கையாளா் பங்குகள் பாதுகாப்பு
எனவே, இந்திய மீனவர்கள் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் போது இதுபோன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்திட வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்ற தமது முந்தைய யோசனையை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.