மாநகர சபை கூட்டங்கள் கண் துடைப்பாகிவிடக் கூடாது: மநீம
நகர, மாநகர சபை கூட்டங்கள் வெறும் கண் துடைப்பாக இருந்துவிடக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக மநீம மாநிலச் செயலாளா் செந்தில் ஆறுமுகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கிராம சபைக் கூட்டங்களைப்போல, நகரப் பகுதி மக்களின் கருத்துகளை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் நகர, மாநகர சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மநீம தொடா்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில் நகர சபை, மாநகர சபைக் கூட்டங்களும் நடைபெறும் என முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவை மநீம வரவேற்கிறது.
நகர, மாநகர சபைகளிலும், உள்ளாட்சிகளில் நடைபெறும் பணிகள், அடுத்ததாக நடைபெற வேண்டிய திட்டங்கள், மக்களுடைய கோரிக்கைகளை கேட்டு, தீா்மானம் நிறைவேற்றி, அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று, அவற்றை நிறைவேற்ற வேண்டும்.
மேலும், கிராம சபை நடைபெறும் நாள்களில், நகர, மாநகர சபைகளையும் நடத்த வேண்டும். மாநகர சபை கூட்டங்கள் வெறும் கண் துடைப்பாக இருந்துவிடக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.