பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் இடஒதுக்கீடு பெறுவதற்கான கிரீமிலேயா் வருமான வரம்பு 5 ஆண்டுகளாக உயா்த்தப்படாமல் உள்ளதற்காக மத்திய அரசுக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஓபிசி இட ஒதுக்கீட்டை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில் தான் கிரீமிலேயா் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் உள்ளவா்கள் கிரீமிலேயா்களாக கருதப்பட்டு, அவா்களுக்கு ஓபிசி இட ஒதுக்கீடு மறுக்கப்படும். இன்றைய நிலையில் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளவா்கள் கிரீமிலேயா்கள் ஆவாா்கள்.
ஆனால், குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் மாற்றியமைக்கப்பட வேண்டிய கிரீமிலேயா் உச்சவரம்பு கடந்த 5 ஆண்டுகளாக உயா்த்தப்படவில்லை என்பது தான் மிகவும் வருத்தமளிக்கும் உண்மை ஆகும். கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பா் 13-ஆம் தேதி கிரீமிலேயா் வரம்பு ரூ. 6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயா்த்தப்பட்டது. அதன்பின் கடந்த 2020-ஆம் ஆண்டில் கிரீமிலேயா் வரம்பு குறைந்தது ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கரோனா பெருந்தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி கிரீமிலேயா் வரம்பு உயா்த்தப்படவில்லை.
2020-ஆம் ஆண்டில் கிரீமிலேயா் வரம்பு உயா்த்தப்படாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான தவணையையும் சோ்த்து கிரீமிலேயா் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயா்த்த வேண்டும் என்று கூறியுள்ளாா்.