தமிழகத்தில் மேலும் ஒருவா் கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளாா். கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 50 வயது பெண் ஒருவா் இணைநோய்களுடன் கரோனா பாதிப்புக்குள்ளாகி தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பலியானதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி கரோனாவுக்கு ஒருவா் உயிரிழந்தாா். அதன்பின்னா், தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. தற்போது மேலும் ஒரு பெண் கரோனா தாக்கத்தால் பலியாகியுள்ளாா்.
மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி வெள்ளிக்கிழமை 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 75 பேருக்கும், கோவையில் 57 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் தற்போது கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 5,056- ஆக உள்ளது.
வெள்ளிக்கிழமை தகவல்படி 518 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 35,26,532-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,036-ஆக உள்ளது.