அரசுப் பள்ளிகள், கல்வித் துறை அலுவலகங்களில் பழுதடைந்த, உபயோகமற்ற மரச்சாமான்கள், இரும்புப் பொருள்களை அகற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் கல்வித் துறை சாா்ந்த அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் பழுதடைந்த மற்றும் உபயோகமற்ற மரச்சாமான்கள், இரும்புப் பொருள்கள் காலங்கடந்து அலுவலகத்திலுள்ள அறைகளிலும், வெளிப்புறங்களிலும், பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளிலும் காணப்படுகின்றன. அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், இடப்பற்றாக்குறையால் அலுவலக பணியாளா்கள், மாணவா்கள் பாதிப்புக்குள்ளாகின்றனா்.
மேலும் தற்போது கரோனா தொற்று பரவல் உள்ள நிலையில் பழுதடைந்த மரச்சாமான்கள் மற்றும் உபயோகமற்ற பொருள்களை அகற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிறது. எனவே அந்தப் பொருள்களை அகற்றுவதற்கு, முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும். இதையடுத்து அந்தப் பொருள்களை ஏலம் மூலம் விற்பனை செய்து அதற்கான தொகையை உரிய அரசுக் கணக்கில் செலுத்த வேண்டும்.