சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கொலை வழக்கில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பாஸ்கரன். இவர் நேற்று கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாலீத்தின் கவர்களால் சுற்றப்பட்டு நெற்குன்றம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து போலீசார் உடலை மீட்டு கொலை வழக்கு பதிவு செய்து ஆறு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரை செங்குன்றம் அருகே வைத்து போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கணேசன் கடந்த ஐந்து வருடமாக விருகம்பாக்கம் பகுதியில் பாலியல் தொழில் செய்து வருவதாகவும், மேலும் கணேசனுக்கும் பாஸ்கருக்கும் கடந்த இரண்டு வருடங்களாக பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி பாஸ்கர் அங்கு வந்து செல்வதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பாஸ்கரன், கணேசன் வீட்டிற்கு சென்று பாலியல் தேவைகளுக்காக குறிப்பிட்ட இரண்டு பெண்களை பாஸ்கரன் கேட்டதாகவும் அதற்கு கணேசன் அவர்கள் வர தாமதமாகும் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க- கேரளம்: தாக்கிய சிறுத்தையை வெட்டிக்கொன்ற பழங்குடி விவசாயி
இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரன், கணேசனை கோபத்தில் கொச்சை வார்த்தைகளால் திட்டி இருக்கிறார். இதனால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கணேசன் ஆத்திரத்தில் பாஸ்கரனை கீழே தள்ளிவிட்டு அடித்து கொலை செய்து கை கால்களை கட்டி இரு சக்கர வாகனத்தில் வைத்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று உடலை வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், கொலைக்கான முழுக் காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..