காஞ்சிபுரத்தில் அதிகாலை அரசு பேருந்து ஓட்டுநரை ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கியதால் பேருந்தை நிறுத்தி ஊழியர்கள் ஒரு மணி நேரம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து பணிமனைகள் 3 செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு அதிகாலைமுதல் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் ஓரிக்கை பணிமனை 2-லிருந்து தாம்பரம் செல்லும் பேருந்தை ஓட்டுநர் சுரேஷ் மற்றும் நடத்துநர் உமாபதி பணிமனையில் இருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்கு எடுத்து வந்து கொண்டிருந்தபோது பேருந்து நிலையத்திற்கு வெளியே தவறான எதிர்திசையில் பேருந்துக்கு முன்பாக வந்து ஆட்டோவை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்தனர்.
இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் மற்றொரு பேருந்து நடத்துநர் தனஞ்செயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது ஓட்டுநர் சுரேஷ் என்பவரை ஆட்டோ ஓட்டுநர் புல்லட் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பலமாக தாக்கியதில் ஓட்டுநரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அரசு போக்குவரத்து பேருந்துகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர்களிடம் காவல்துறை சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அரசு ஊழியரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை கைது செய்துள்ளதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.