சேலத்தில் நேற்று இரவு விடிய விடிய பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், மக்களை கயிறு கட்டி மீட்டனர்.
சேலம் மாவட்டத்தில் பரவலாக தினந்தோறும் நல்ல மழை பெய்து வருகிறது இதனால் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பதோடு நிலத்தடி நீரும் உயர்ந்து வருகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியை பொருத்தவரையில் தினந்தோறும் மழை பெய்து வருவதால் பாதிப்பு அதிகரித்து வருவதோடு ஏற்காட்டில் இருந்து கீழ்நோக்கி வரும் தண்ணீர் சேலம் மாநகராட்சியின் பல்வேறு பகுதியில் ஆறுகள், ஓடைகள் மற்றும் கால்வாய்கள் வழியாக அதிகளவு செல்வதால் அதனை ஒட்டியுள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பெய்த மழையின் காரணமாக லீ பஜார் பகுதியில் உள்ள ஓடையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்ததால் ஓடையையொட்டி உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஓடையையொட்டி உள்ள சாலைகள் மற்றும் ஓடையிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் சென்றதால் வெளி வந்ததால் அடித்துச் செல்வோம் என்ற அச்சத்தில் மக்கள் வீட்டிற்குள்ளே பல மணி நேரம் இருந்தனர்.
இதனையறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து பிறர் உதவியுடன் கயிறு கட்டி அவர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்தனர்.
இதேபோல் சேலம் மாநகரில் அரிசி பாளையம், ஆர்.டி. பால் தெரு, சாமிநாதபுரம், தோப்புக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வந்தாலும் தொடர் மழை காரணமாக முழுமையாக செயல்படுத்த முடியாத சூழ்நிலையில் அதிகாரிகள் விழி பிதுங்கி உள்ளனர்.
ஓடை மற்றும் கால்வாய்களில் ஆக்ரமிப்புகள் மற்றும் அடைப்புகளை நீக்கினால் மட்டுமே தண்ணீர் எளிதாக செல்ல வழி ஏற்படும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.