சேலம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி சேலம் நாட்டாமை கழக கட்டிட வளாகத்தில் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் கூட்டியக்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் இன்று திடீரென சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பழைய நாட்டாமை கழக கட்டட வளாகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமாயி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பல்வேறு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டது போல தமிழகத்திலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
திமுகவின் தேர்தல் கால வாக்குறுதிபடி, தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களில் பணிபுரியும் சிபிஎஸ் திட்ட பணியாளர்களுக்கு வழங்குவது போன்று தமிழகத்தில் உள்ள திட்ட ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டன.
அரசு ஊழியர் கூட்டியக்கத்தினர் திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அரசு அலுவலக வளாகத்தில் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க: சசிகலா - வைத்திலிங்கம் பரஸ்பர சந்திப்பு!
இதனையடுத்து காவல் துறையினர் விரைந்து வந்து உரிய அனுமதி பெற்று போராட்டத்தை தொடங்கலாம் என தெரிவித்து, இருதரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.