தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்ததா தாழ்வு பகுதி காரணமாக,
இன்று முதல் 5 நாள்களுக்கு வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் 7, வால்பாறை 6, அவலாஞ்சி, சோலையார், ஹரிசன் எஸ்டேட், செருமுள்ளி தலா 5 செ.மீ பதிவாகியுள்ளன.
மீனவர்களுக்கு
மீனவர்கள் இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
வடக்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.