திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சுவாமி தரிசன் செய்தார்.
எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை கார் மூலம் திருப்பதி வந்தார். வரும் வழியில் அதிமுகவினர் திரண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு மாலை, சால்வைகள் அணிவித்து, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை திருப்பதியில் உள்ள ஆதிவராக சுவாமி கோயிலில், ஹயக்ரீவர் கோயிலில் சுவாமி தரிதன் செய்தார்.
பின்னர் திருமலைக்கு சென்ற அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். ஏழுமலையான் கோயிலில் விஜபி பிரேக் தரிசனத்தில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் லட்டு உள்ளிட்ட தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.
இதையடுத்து ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள ஆஞ்சநேயர் சுவாமி சன்னதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் புறப்பட்டுச் சென்றார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.