வலங்கைமான்: வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் தொழிலாளி ஒருவர் குளத்தில் விழுந்து பலியானார்.
வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் ஆவணி கடை ஞாயிறை முன்னிட்டு இரவு நடைபெற்ற தெப்பத் திருவிழாவில், திருவிழா முடிவுற்ற பின்னர் தெப்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மாயமானர்.
எங்கும் தேடியும் கிடைக்காத நிலையில் திங்கள்கிழமை அதிகாலை தெப்பக்குளத்தில் சடலமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர் .
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆவணி கடை ஞாயிறை முன்னிட்டு ஆலயத்திற்கு அருகில் உள்ள புனித குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது.
தெப்ப திருவிழாவானது ஞாயிறு இரவு 11 மணிக்கு துவங்கி சுமார் ஒரு மணி அளவில் முடிவுற்றது. பாதுகாப்பு பணியில் வலங்கைமான் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக தெப்பத்தினை இயக்கும் பணியில் அவற்றில் அனுபவம் வாய்ந்த குத்தாலம் பகுதியைச் சேர்ந்த நடராஜன், சுரேஷ், சந்திரமோகன் உள்ளிட்ட 4 பேர் ஈடுபட்டிருந்தனர். தெப்பத்திருவிழா முடிவுற்ற பின் அதை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்பணியில் ஈடுபட்டு இருந்த சந்திரமோகன் என்பவரை காணவில்லை என வலங்கைமான் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தெப்பக்குளத்தில் இறங்கி மாயமான சந்திரமோகனை தேடினர். பின்னர் சந்திரமோகன் சடலமாக குளத்தின் அடிப்பகுதியில் இருந்து மீட்டனர்.
சந்திரமோகன் குளத்தில் விழுந்து 12 மணிநேரம் ஆகாத நிலையில் சடலமாக குளத்தின் அடியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து வலங்கைமான் காவல் துறையினர் சடலத்தை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.