காஞ்சிபுரத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் மயங்கி விழுந்ததால் பதற்றம் நிலவியது.
காஞ்சிபுரத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் காவலன் கேட் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் கே பழனி, வாலாஜாபாத் பா. கணேசன், மைதிலி திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி காஞ்சி பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார்.
இதையும் படிக்க | மின்கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்!
கூட்டத்தில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் முடிந்து மேடையை விட்டு இறங்கிய போது கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவர் மேடைக்கு பின்புறம் இருந்த பிள்ளையார் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கட்சி தொண்டர்களால் முதலுதவி செய்யப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு அவரது காரில் அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தற்போது மருத்துவமனையில் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.