நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. 50 பள்ளிகளைச் சேர்ந்த 2,856 மாணவ-மாணவிகள் பயனடைந்தனர்.
தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம் மதுரையில் வியாழக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற மாவட்டங்களில் இத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
நாமக்கல் கோட்டை நகரவை தொடக்கப் பள்ளியில் சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் திட்டத்தை தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு கிச்சடி, கேசரி ஆகிய சிற்றுண்டியை வழங்கி குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம் ஆகியோரும் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். மாவட்டத்தில் கொல்லிமலையில் 41 பள்ளிகள், நாமக்கல் நகராட்சியில் மூன்று பள்ளிகள், திருச்செங்கோடு நகராட்சியில் 6 பள்ளிகள் வீதம் மொத்தம் 50 பள்ளிகளுக்கு உள்பட்ட 2,856 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் நகராட்சி தலைவர் து.கலாநிதி, ஆணையர் இ.மு.சுதா, முதன்மை கல்வி அலுவலர் ப. மகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.