மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியிலிருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.
காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு சற்று தணிந்ததால் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
இதையும் படிக்க | கரோனாவை வென்ற முதியவா்களை அச்சுறுத்தும் மறதி நோய்!
சுரங்க மின் நிலையம் மற்றும் அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆகவும் இருந்தது.