சேலம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்த போது விரைந்துசென்று காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை வீரரை
அதிகாரிகள் பாராட்டினர்.
சேலம் ரயில் நிலையத்திலிருந்து கரூர் செல்லும் பாசஞ்சர் ரயில் இன்று மாலை முதலாவது நடைமேடையில் இருந்து கிளம்பியது. அப்போது அவசர அவசரமாக ராசிபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ரயிலில் ஏறும்போது திடீரென அவர் கால் தவறி கீழே விழுந்தார். அப்போது பாதுகாப்பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்படை காவலர் பிரவீன் குமார் விரைந்து சென்று அந்தப் பெண்ணை மீட்டார். இதனையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.
பிறகு விசாரணை நடத்தியதில் அந்த பெண் ராசிபுரத்தைச் சேர்ந்த காளியம்மாள் என்பதும் சேலத்தில் இருந்து ராசிபுரத்திற்கு செல்வதும் தெரியவந்தது. பிறகு அந்த பெண்ணுக்கு உரிய அறிவுரை வழங்கி அந்த ரயிலிலேயே அனுப்பி வைக்கப்பட்டார்.
ரயில்வே காவலரின் இந்த துரித செயல்பட்டால் அந்தப் பெண்ணின் உயிர் இன்று காப்பாற்றப்பட்டது. ரயில்வே காவலரின் இந்த நடவடிக்கையை அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.