தமிழகத்தில் 5,583 பள்ளிக் கட்டடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களை இடித்து புதிய கட்டடங்களை அமைப்பதற்கு குழு அமைக்கக் கோரி மதுரையைச் சரிந்த சமூக ஆர்வலர் செந்தில் முருகன் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயணா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் தமிழக அரசு தரப்பில் பதில் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், 'தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பழைய பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது 5,583 பள்ளிக் கட்டடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
2021-22 ஆம் ஆண்டில் 2,553 பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. 2022-23 ஆம் ஆண்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 3,030 கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருவதால் வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிக்க | காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங் போட்டி?