தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சேலம் கன்னங்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அரசு மேல்நிலைப்பள்ளி, கன்னங்குறிச்சி மாணவர்கள் தேசிய, மாநில மற்றும் சேலம் ஊரக ஏ மைய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவன் எஸ். சிவசக்தி ஜவஹர்லால் நேரு அரங்கம், புதுதில்லியில் நடைபெற்ற CP கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணியில் இடம்பெற்று அரை இறுதி போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் தலா ஒரு கோல் அடித்தார்.
போட்டியில் தமிழக அணி இரண்டாம் இடத்தை பெற்று கோப்பையை வென்றது. சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 51-54 எடை பிரிவில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் நவீன் குமார் பங்குகொண்டு முதல் இடத்தை பெற்றான். மாணவனுக்கு தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
மேலும் சேலம் ஊரக ஏ மைய அளவிலான தடகளப் போட்டிகள் 19.09.2022 மற்றும் 20/9/2022 அன்று நீலாம்பால் சுப்ரமணியம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குகொண்டு மாணவ மாணவிகள் மூன்று தங்கம், வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களை பெற்றனர். மேலும் 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி எம். ஸ்வேதா 11 புள்ளிகளுடன் தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.
இதையும் படிக்க: 41 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம்: தமிழக அரசு
தேசிய, மாநில மற்றும் மைய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்ற பள்ளி மாணவ மாணவிகளை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. சீனிவாசன் அவர்களும், தலைமை ஆசிரியர் வளர்மதி மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்களும், உடற்கல்வித்துறை ஆசிரியர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.