சென்னை : கள்ளக்குறிச்சியில், பள்ளி மாணவி மரணத்தைத் தொடர்ந்து கலவரத்துக்கு உள்ளான தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரி பொது நலன் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல். ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நலன் மனுவில், கலவரத்துக்கு உள்ளான தனியார் பள்ளியைத்திறக்க அரசு உத்தரவிட்டாலும், பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மாணவர்கள் - பெற்றோர் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
கள்ளக்குறிச்சி பள்ளியில் படித்ததால் பிற பள்ளிகளில் மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படுவதில்லை என்றும், ஏற்கனவே இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்திவிட்டதால் மற்றொரு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் சிரமப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.