தமிழ்நாட்டில் கடந்த 3 நாள்களாக பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதன் எதிரொலியாக திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு கேன், பாட்டில்கள்களில் பெட்ரோல் வழங்குவதற்கு தடை விதித்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கோவை குனியமுத்தூா், ஒப்பணக்கார வீதி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மதுரை, ராமநாதபுரம், திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி பிரமுகா் வீடுகள், கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனைத் தொடா்ந்து, மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிக்க | காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், உடனே இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். காவல்துறை சார்பிலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு மாவட்ட காவல் துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், அவ்வாறு கேன், பாட்டில்களில் பெட்ரோல் வாங்க வரும் நபர்களின் விவரங்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
காவல் துறை அறிவுறுத்தலின் படி, திண்டுக்கல், விருதுநகர் நகர் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தங்கள் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வரும் வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் போடப்படும். வாகனங்கள் தவிர உதிரியாக எந்தவொரு கேன்களிலோ, பாட்டில்களிலோ சில்லரையாக பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.