மதுரை கீரைத்துறையில் வசிக்கும் அனுப்பானடி ஆர்.எஸ்.எஸ் பகுதி தலைவர் கிருஷ்ணன் என்பவர் வீட்டில் 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
மதுரை கீரைத்துறை வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் அனுப்பானடி ஆர்.எஸ்.எஸ் பகுதி தலைவர் கிருஷ்ணன் என்பவர் வீட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக கீரைத்துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த மர்ம கும்பல் பற்றிய விவரம் தெரிந்தது.
இதனைத் தொடர்ந்து கீரைத்துறை காவல் துறையினர் நேற்று நள்ளிரவு எஸ்.எஸ். காலனியில் உள்ள ஒரு வீட்டில் இரவு தூங்கி கொண்டு இருந்த அன்வர் உசேன் மகன் அபுதாஹீரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கு வக்கீல் யூசுப் என்பவர் தலைமையில் 50 பேர் கும்பலாகத் திரண்டு வந்து அபுதாஹிரை அடிக்கக் கூடாது என்று காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து வக்கீல் யூசுப் கூறுகையில், "மதுரை எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்த அன்வர் உசேன் மகன் அபுதாஹீர் என்பவரை கீரைத்துறை காவல் ஆய்வாளர் பெத்துராஜ் மற்றும் காவல் துறையினர் கதவை உடைத்து வீட்டிற்குள் தூங்கிக் கொண்டு இருந்த அபுதாஹிரை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். சட்டை இல்லாமல் தூங்கியவரை அப்படியே அரை நிர்வாணமாக வாகனத்தில் ஏற்றி, 'எங்கு அழைத்துச் செல்கிறோம்'? என்ற விவரம் கூட தெரிவிக்காமல் கூட்டி சென்றனர்.
எனவே நாங்கள் ஒவ்வொரு காவல் நிலையமாக சென்று விசாரிக்க வேண்டி வந்தது. அப்போது கீரைத்துறை காவல் நிலையத்தில், அபுதாஹிரை காவல் ஆய்வாளர் பெத்துராஜ், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் ஆகியோர் விசாரணை என்ற பெயரில் கடுமையாக தாக்கி வருகின்றனர். எங்களின் கோரிக்கை என்னவென்றால் காவல் துறை சட்டத்திற்கு புறம்பாக விசாரணை செய்யக்கூடாது. மனித உரிமை மீறலில் ஈடுபடக்கூடாது.
இதையும் படிக்க: ஹிமாசலில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்!
விசாரணை என்ற பெயரில் அடித்து சித்திரவதை செய்ய வேண்டாம். உச்சநீதிமன்ற சட்டபூர்வ வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் காவல் துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்து உள்ளார்.