நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் உள்ள கோயில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.
இந்த நவராத்திரி என்பது வீட்டில் விரதமிருந்து பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு'பிரம்மோற்சவம்' என்றும் கூறப்படுகிறது.
நவராத்திரி பூஜை என்பது ஒன்பது நாட்கள் இரவில் செய்யக்கூடிய பூஜையாகும். புரட்டாசி அமாவாசைக்கு மறுநாள் இருந்து தான் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
சைவ, வைணவக் கோயில்களிலும், வீடுகளிலும்,தொழில் நிறுவனங்களிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா நீடாமங்கலம் பகுதியில் திங்கள்கிழமை தொடங்கியது.
இதனைமுன்னிட்டு நீடாமங்கலம் சந்தானராமர் கோயில், காசிவிசுவநாதர் கோயில், ஆலங்குடி அபயவரதராஜப்பெருமாள் கோயில், பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது.
கோயில்களில் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் திங்கள்கிழமை மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் செய்துள்ளனர். வீடுகளிலும் நவராத்திரி கொழு வைக்கப்பட்டுள்ளது. ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு ஏலவார்குழலியம்மனுக்கும், சுக்கிரவார அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
ஏலவார்குழலியம்மனுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டது. பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதையும் படிக்க: 2023-ல் இந்தியாவில் 10.4% ஊதியம் உயர வாய்ப்பு!
நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு.