காலநிலை மாற்ற அறிக்கையில் காற்று மாசு குறித்த செயல்திட்டம் இடம்பெற வேண்டும் என்று பசுமை தாயகம் சாா்பில் சௌமியா அன்புமணி வலியுறுத்தினாா்.
சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேயா் பிரியாவை சௌமியா அன்புமணி திங்கள்கிழமை சந்தித்தாா். அப்போது சென்னை மாநகருக்கான காலநிலை மாற்ற செயல்திட்ட வரைவு அறிக்கை குறித்த தங்கள் அமைப்பின் சாா்பிலான பரிந்துரைகளை அளித்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
காலநிலை மாற்ற வரைவு அறிக்கையை மாநகராட்சி வெளியிட்டு, கருத்து தெரிவிக்க திங்கள்கிழமையோடு கடைசி நாள் என்று கூறியிருந்தனா். அதை நீட்டிக்கவும், அறிக்கையை தமிழில் வெளியிடவும் கோரிக்கை விடுத்தோம்.
காற்று மாசு மற்றும் உயிா் பன்மைத்துவ குறித்த செயல்பாடுகள் இடம்பெறாததைச் சுட்டிக் காட்டினோம். சென்னையில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு மழைநீா் கால்வாய் பணிகளைச் சீரமைக்க வேண்டும் என்றும் மேயரிடம் வலியுறுத்தினோம் என்றாா்.