சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை துரிதமாக ஆற்றில் குதித்து காப்பாற்றிய மீனவர் மற்றும் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த முதலைமேடு திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி அஞ்சலை வயது (90). இவர் தனது மகள் வீட்டில் வசித்து வந்த நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக மனமுடைந்த மூதாட்டி அஞ்சலை இன்று காலை கொள்ளிடம் ஆற்று பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை கண்ட அப்பகுதி மீனவர் சேகர் துரிதமாக ஆற்றில் குறித்து நீந்தி சென்றார். அதே நேரம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் தனஞ்ஜெயன் கரையில் இருந்த படகு மூலம் ஆற்றில் சென்றார். இந்நிலையில் ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த மூதாட்டி அஞ்சலையை மீனவர் சேகர் மற்றும் காவலர் இணைந்து பாதுகாப்பாக மீட்டு படகின் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மூதாட்டி பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார். மூதாட்டி தற்கொலைக்கு முயன்ற போது துரிதமாக செயல்பட்டு மீனவர் மற்றும் காவலர் அவரை மீட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிக்க: பிக் பாஸ்: 6-வது முறையாகத் தொகுத்து வழங்கும் கமல்!
அதே நேரம் துரிதமாக செயல்பட்ட மீனவர் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுகளுக்கும் குவிந்து வருகிறது.