அதிமுகவின் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகிய இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டதையடுத்து அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வருகின்றன.
ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு நீக்குவதும், அதுபோல இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை ஓபிஎஸ் தரப்பு நீக்குவதும் என நிகழ்ந்து வருகிறது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஓரிரு மணி நேரத்திலேயே பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக அதிமுகவின் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், 'கட்சியின் மூத்த தலைவர் என்ற முறையில் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஆலோசனை பெறுவதற்காக வந்திருந்தோம். ஒரு மணி நேரம் ஆலோசனை செய்தோம். அவர் தனது அனுபவத்தைக் கூறினார். அவரது கருத்தை மக்கள் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்
எம்ஜிஆர், ஜெயலலிதா முன்னெடுத்த கொள்கைகளை அவர் மக்களிடம் கூறி வருகிறார்.
பொறுத்திருந்து பாருங்கள். அனைவரையும் சந்திப்பேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் இருந்தவர்களை சந்தித்து ஆசி பெறுவோம்' என்றார்.
இதையும் படிக்க | மூன்றாகப் பிரிகிறது சென்னைப் பெருநகரம்?