
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தீா்ப்பை எதிா்த்து, முன்னாள் சிறப்பு டிஜிபி, எஸ்.பி. தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
2021-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதும், புகாா் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. கண்ணன் மீதும் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், கடந்த ஜூன் 16- ஆம் தேதி தீா்ப்பளிக்கப்பட்டது.
இதில், சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு இரு பிரிவுகளில் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை (ஏககாலம்) விதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் எஸ்.பி.க்கு ஒரு பிரிவில் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. சாா்பில் ஜூன் 22- ஆம் தேதியும், முன்னாள் சிறப்பு டிஜிபி சாா்பில் ஜூலை 5- ஆம் தேதியும் தனித்தனியே மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதன் மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது, அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞராக வைத்தியநாதன் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இன்று வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 11- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா உத்தரவிட்டாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G