ஏமாற்றம் தரும் மத்திய பட்ஜெட்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

மத்திய அரசின் பட்ஜெட், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
ஏமாற்றம் தரும் மத்திய பட்ஜெட்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

மத்திய அரசின் பட்ஜெட், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். மத்திய பட்ஜெட் குறித்து, புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு எந்தவிதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில்

ஆழ்த்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூட நிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை தருகிறது.

தனிநபா் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம், 157 மருத்துவக் கல்லூரிகளில் 157 புதிய செவிலியா் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, “மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காக வட்டியில்லாக் கடன், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது” போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக இருப்பது ஆறுதல். தனிநபா் வருமான வரி மாற்றங்கள் ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கிறது.

ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதைக் குறைந்தது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படாததும், தோ்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து

வளா்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் மத்திய அரசின் பட்ஜெட்டானது, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது. மாநிலங்களுக்கு மூலதனக் கடன் வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு முழுப் பயனும் வராது.

இது, மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பதால், எந்த ஒரு நிபந்தனையுமின்றி, மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இந்தத் திட்டம் வழிவகை செய்ய வேண்டுமே தவிர, இப்படி பல நிபந்தனைகளை விதித்துப் பயனைத் தடுப்பது முறையாகாது. மேலும், இந்தத் திட்டத்தில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும்.

பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் ஒதுக்கீடு ரூ.48 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.79 ஆயிரத்து 500 கோடியாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு வீட்டுக்கான கட்டுமான விலையை உயா்த்தாவிட்டால், மாநிலங்களுக்கு அது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, இந்தத் திட்டத்தின்கீழ், உயா்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப மத்திய அரசானது தனது பங்கை உயா்த்திட வேண்டும்.

பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், அந்தத் திட்டங்களுக்காக தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது வருந்தத்தக்கது. கரோனா பெருந்தொற்றில் இருந்து நம் நாடு மீண்டு வரும் சூழலில், மத்திய அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிா்பாா்ப்பு மக்களிடையே இருந்தது. அந்த எதிா்பாா்ப்பு இன்று பொய்த்துப்

போயிருக்கிறது. நாட்டில் நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், பணவீக்கம் ஆகியவற்றைப்

புறக்கணித்து, மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்துக்கு எந்தவித ஆக்கப்பூா்வமான முயற்சிகளையும் முன்னெடுக்காமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த ஒன்றிய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே

ஏற்படுத்தியுள்ளது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com