இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகம் வந்தவர் ஞாயிற்றுக்கிழமை நாகையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடலோர காவல் குழும போலீசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை, யாழ்ப்பாணம், தொண்ட மன்னார் பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகம் மகன் மோகனராஜா(42). இவர் கள்ளத் தோணி மூலம் தமிழக கடலோரப் பகுதியான நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த வெள்ளப் பள்ளம் கிராமத்திற்குள் சட்ட விரோதமாக நுழைந்துள்ளார். அவரை கண்டு சந்தேகமடைந்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக அளித்த தகவலின் அடிப்படையில் கீழையூர் கடலோர காவல் குழும போலீசார் அங்கு விரைந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகு மூலம் தமிழக எல்லைக்குள் நுழைந்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மோகனராஜாவை கைது செய்த போலீசார், அவரை நாகை கடலோர காவல் குழும காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | வெள்ளக்கோவில் அருகே பேருந்து - வேன் மோதி விபத்து: 3 பேர் பலி
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியில் வாழ வழியின்றி ரூ.2 லட்சம் பணம் கொடுத்து பைபர் படகு மூலம் அகதியாக வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீவிர விசாரணைக்கு பின்னர் அவர் இலங்கை அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அகதியாக தமிழக எல்லைக்குள் ஒருவர் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.