தமிழக மருத்துவத்துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஒப்பந்த செவிலியர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளில் கரோனா தொற்று அதிகரித்ததையடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் சுமார் 2,300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
இவர்களின் பணிக்கால ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் பணி நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு கடந்த சனிக்கிழமை ஆணை வெளியிட்டது. இதற்கு ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்த நான்கு நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | சென்னையில் தொடரும் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவத்துறை அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய செவிலியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் இன்று மருத்துவத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக செவிலியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.