வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யத்தையடுத்த கோடியக்கரை கடலோரப் பகுதியில் அரிய வகையான ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் இட்ட 312 முட்டைகள் இன்று(ஜன.7) சேகரிக்கப்பட்டு செயற்கைமுறை பொரிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அரிய வகை கடல் ஆமை இனமான ஆலிவ் ரிட்லி டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில் இனப்பெருக்கத்துக்காக கோடியக்கரை உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு வந்து முட்டையிடும்.
அந்த முட்டையிலிருந்து சுமார் 41 நாள்களுக்குப் பிறகு இயற்கையாகவே குஞ்சுகள் வெளிவந்து, தானாகவே கடலுக்குள் சென்றுவிடும்.
இந்த முட்டைகள் பல நேரங்களில் நாய், நரி போன்ற விலங்குகளாலும், சமூக விரோதிகளாலும் சேதப்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு, செயற்கை முறையில் குஞ்சுகளை பொரிக்கச் செய்து கடல் ஆமை இனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
நிகழாண்டுக்கான பருவம் தொடங்கியுள்ள நிலையில், சனிக்கிழமை 312 முட்டைகள் சேகரிக்கப்பட்டன.