ஜனவரி 13 வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 13ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 13ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை இன்று ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கியது. இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர், திராவிட மாடல், தமிழ்நாடு என்ற வார்த்தைகளையும் அண்ணா, அம்பேத்கர், கலைஞர் என்ற பெயர்களையும் படிக்காமல் புறக்கணித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது தவறு என்றும் அச்சடிக்கப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்றும் பேரவையிலேயே முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததை தொடர்ந்து, முறையாக தேசிய கீதத்துடன் கூட்டம் முடிப்பதற்கு முன்னதாகவே கூட்டத்திலிருந்து பாதியிலேயே ஆளுநர் புறப்பட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் ஜனவரி 13ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அப்பாவு கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜனவரி 13 வரை நடத்த அலுவல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாளை இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு பேரவை ஒத்திவைக்கப்படும். இந்த தொடரில் கேள்வி நேரங்கள் இடம்பெறும். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கடைசி நாளில் முதல்வர் உரையாற்றுவார்.

தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகு ஆளுநர் வெளியேறுவதே மரபு. ஆனால், தேசிய கீதத்திற்கு முன்பே ஆளுநர் வெளியேறியதால் நாட்டை அவமானப்படுத்தியதாக நான் நினைக்கிறேன்.

தமிழக அரசு தயாரித்த உரையில் சில பகுதிகளை நீக்கியும், சேர்த்தும் ஆளுநர் படித்துள்ளார். அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பெயரை கூட படிக்காதது வேதனை அளிக்கிறது.

மத்திய அரசு தயாரித்த உரையை குடியரசுத் தலைவர் படிக்கிறார். ஆனால், பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. உயர்பதவிக்கு ஆசைப்பட்டு ஆளுநர் இப்படி நடந்து கொள்கிறார் என்ற சந்தேகம் எழுகிறது. அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய ஆளுநரே ஏன் இப்படி நடந்து கொண்டார் எனத் தெரியவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com