பிரபல நரம்பியல் சிகிச்சை நிபுணரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவருமான நாகராஜன் வெங்கட்ராமன்(77) உடல்நலக்குறைவால் இன்று(வெள்ளிக்கிழமை) காலமானார்.
போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மருத்துவத் துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாகராஜன் வெங்கட்ராமன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக கடந்த அக்டோபரில் நியமிக்கப்பட்டார். தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சிக் குழுத் தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கௌரவப் பேராசிரியர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் நெறிமுறைக்குழுவின் (Ethical committee) தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்து வந்தவர்.
தமிழ்நாடு சுகாதாரத்துறையினர் முன்னாள் செயலரும், தற்போதைய கூட்டுறவுத்துறை செயலருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.