ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம், தேசிய சட்ட ஆணையத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள், அரசியல் கட்சியினர்களிடம் சட்ட ஆணையம் கருத்து கேட்கிறது.
அந்தவகையில் அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ள சட்ட ஆணையம், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இதற்கு பதில் அளித்துள்ள பழனிசாமி, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 16 ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க சட்ட ஆணையம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.