காரைக்கால்: பொங்கல் நாளில் கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி வழிபாடு செய்தார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி குடும்பத்துடன் சனிக்கிழமை இரவு காரைக்கால் வந்தார். திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்று அனைத்து சந்நிதிகளிலும் வழிபாடு நடத்திவிட்டு, திருநள்ளாறு தங்கும் விடுதியில் இரவு தங்கியிருந்தார்.
இதையும் படிக்க | தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா கோலாகலம்!
பொங்கல் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் கோயிலுக்குச் சென்ற அவர், மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ பிரணாம்பிகை மற்றும் ஸ்ரீ தியாகராஜர் சந்நிதிகளில் வழிபாடு செய்தார். தனி சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு தைலாபிஷேகம் மற்றும் கருப்பு வஸ்திரம் உள்ளிட்ட மலர் மாலைகளுடன் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார். சந்நிதியிலேயே தில தீபம் ஏற்றினார்.
சிவாச்சாரியர்கள் அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்து பிரசாதம் வழங்கினர். பொங்கல் நாளில் பக்தர்கள் கணிசமாக தரிசனம் செய்துவரும் நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வரின் வருகையொட்டி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.