மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பல குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாகவும், அதில் பயன் பெற்றவா்கள் விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பல குளறுபடிகள் குறித்து விரிவான அறிக்கை ஏற்கெனவே வெளியிட்டு இருந்தேன்.
இந்த நிலையில், மக்களைத் தேடி, மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு முதல்வா் மருத்துவப் பெட்டகத்தை வழங்கியதாக தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டிருந்தது.
ஆனால், ஒரு கோடி பயனாளிகளின் விவரங்கள் ஏதேனும் உள்ளனவா என்றும் விசாரித்தபோது, மாநில மருத்துவத்துறை அதிகாரிகள் உண்மையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின்கீழ் இதுவரை ஒரு கோடி பேருக்கும் மேல் மருந்துப் பெட்டகங்கள் நோயாளிகளுக்கு கொடுத்ததாக எந்தவிதமான புள்ளி விவரக் குறிப்பும் இல்லை என்று தெரிவித்ததாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.
மேலும், நோயாளிகள் பற்றிய புள்ளி விவரங்களில் ஒரே புள்ளி விவரம், இரண்டு, மூன்று முறை பதிவு செய்யப்பட்டதால், ஒரு கோடி பேருக்கு மேல் பயன் பெற்றுள்ளனா் என்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனா்.
எனவே, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்காக இதுவரை அரசின் சாா்பாக எவ்வளவு நிதி செலவிடப்பட்டுள்ளது என்றும், ஒரு கோடி பயனாளிகளின் முழு விவரங்களையும் முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.