தை மாத அமாவாசையையொட்டி சனிக்கிழமை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு (ஜன.19 முதல் 22 )வரை நான்கு நாள்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையொட்டி, சனிக்கிழமை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிகாலை குவிந்தனர்.
பின்னர் காலை 6.15 மணிக்கு வனத்துறையினர் மலைக்கோயிலுக்குச் செல்வதற்கான நுழைவுவாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர்.
உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தை மாத அமாவாசையையொட்டி சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி,செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.