வழக்கு விசாரணை: மாவட்ட நீதிமன்றங்களுக்கு உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப்பு

வழக்குகளை விரைந்து விசாரிக்க மாவட்ட நீதிமன்றங்களுக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், காலதாமதம் செய்வதற்காக தேவையில்லாமல் விசாரணையை ஒத்திவைக்கக்கூடாது

வழக்குகளை விரைந்து விசாரிக்க மாவட்ட நீதிமன்றங்களுக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், காலதாமதம் செய்வதற்காக தேவையில்லாமல் விசாரணையை ஒத்திவைக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியது.

கீழமை நீதிமன்றங்களில் நடத்தப்படும் சிவில் வழக்குகளை விரைந்து முடிக்க அந்தந்த மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கீழமை நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட சிவில் வழக்குகள் குறித்து அந்தந்த மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், விரைந்து விசாரிக்க உத்தரவிட முடியாது. மேலும், வழக்கு விசாரணையின்போது காலதாமதம் செய்வதற்காக தேவையில்லாமல் விசாரணையை தள்ளிவைக்கக்கூடாது.

வழக்கை காலதாமதம் செய்வதற்காக விசாரணையை தள்ளிவைக்கக் கோரி மனுதாரரோ அல்லது எதிா் மனுதாரரோ நீதிமன்றத்தில் கூறினால் அதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற காலதாமதத்தால் பல வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் கூட நிலுவையில் இருந்து வருகின்றன.

கீழமை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை முழுமையாக நடைபெற்று முடிந்த பிறகே வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும். அதில் உயா் நீதிமன்றம் தலையிட்டு ஒரு சில வழக்குகளை மட்டும் விரைந்து விசாரிக்கும்படி உத்தரவிட முடியாது.

விரைந்து விசாரணையை முடிக்கும் சூழல் இருந்தும், காலதாமதம் செய்வது தெரியவந்தால் மட்டுமே உயா்நீதிமன்றம் உத்தரவிட முடியும் என தெரிவித்தாா். மேலும், இதையடுத்து கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனுக்களை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com