வேளாண் விளைபொருள்களை மதிப்புக் கூட்டி விவசாயிகள் அதிக லாபம் ஈட்டிட, மதிப்புக்கூட்டும் இயந்திரங்களுக்கு அரசு மானியம் வழங்கும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் பெருமக்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்றால், அவ்விளைபொருட்களை நன்கு சுத்தம் செய்து, மதிப்புக்கூட்டுவது அவசியம்.
சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் தரும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கு முன்வருவதில்லை.
எனவே, பல்வேறு மதிப்புக்கூட்டும் இயந்திரங்களை விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அதிக முக்கியத்துவம் தந்து வருகிறது.
2022-23 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், இதர வேளாண் விளைபொருட்களை தரம் பிரித்து, மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தி அதிக இலாபம் பெறும் வகையில், 292 மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பருப்பு உடைத்தல், தானியம் அரைத்தல், மாவரைத்தல், கால்நடை தீவனம் அரைத்தல், சிறிய வகை நெல் அரவை இயந்திரம், நெல் உமி நீக்குதல், கேழ்வரகு சுத்தப்படுத்தி கல் நீக்குதல், தேங்காய் மட்டை உரித்தல், செடியிலிருந்து நிலக்கடலையை பிரித்தெடுத்தல், நிலக்கடலை தோல் உடைத்து தரம் பிரித்தல், மிளகாய் பொடியாக்குதல், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம், பாக்கு உடைத்தல், பருத்தி பறித்தல், தேயிலை பறித்தல், வெங்காயத் தாளினை நீக்குதல் போன்ற மதிப்புக்கூட்டும் பணிகளை மேற்கொள்வதற்கான இயந்திரங்களுக்கு மானியம் வழங்கப்படும்.
மதிப்புக்கூட்டும் இயந்திரங்களுக்கு 40 சதவிகித மானியம் அல்லது ஒவ்வொரு இயந்திரத்திற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்புத் தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.