ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் செவ்வாய்க் கிழமை இன்று (ஜன. 24) கலந்துகொண்டார். காலச்சுவடு பதிப்பகத்தின் உரிமையாளர் கண்ணன், கரூர் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மக்களவைத் தேர்தல் வெற்றியை நோக்கமாக வைத்து ராகுல் காந்தி தலைமையில் ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய ஒற்றுமை நடைப்பயணம், பல்வேறு மாநிலங்களைக் கடந்து, தற்போது ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் ஏராளமான தொண்டர்கள் ராகுல் காந்தியுடன் ஒற்றுமைப் பயணத்தில் கலந்துகொண்டு நடக்கின்றனர். பிரபலங்களும் ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், தற்போது எழுத்தாளர் பெருமாள் முருகன் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ளார். இந்த நடைப்பயணத்தின்போது கரூர் எம்.பி. ஜோதிமணி, காலச்சுவடு கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பெருமாள் முருகன், ''ராகுல்காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் (ஜம்மு) நானும் காலச்சுவடு கண்ணனும் இணைந்து கொண்டோம். 'சாதியும் நானும்' நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு பிரதியை ராகுல் காந்திக்கு பரிசாக வழங்கினேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
எழுத்தாளர் பெருமாள் முருகன்
தமிழில் மாதொருபாகன் நாவல் மூலம் பலரால் அறியப்படுபவர் எழுத்தாளர் பெருமாள் முருகன். தமிழில் சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுதி வருகிறார். 2010ஆம் ஆண்டு ‘மாதொருபாகன்' என்னும் நாவலை எழுதினார். குழந்தைப் பேறில்லாத தம்பதியரின் துயரங்களைக் கூறும் இந்நூல் பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளானது.
இந்த நாவல் ஜெர்மன், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் மாதொருபாகன் நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.