உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டுமென்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடின் கருத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து முதல்வா் ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவு:
உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளாா். இதை முழுமனதுடன் வரவேற்கிறேன்.
உயா்நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக உள்ளது. இந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றுவது, நீதியை நாட்டின் சாமானிய மக்களுக்கு அருகில் கொண்டு வரும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு ஆகியோா் ஏற்கெனவே வரவேற்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.