திருவண்ணாமலை விசிக வடக்கு மாவட்ட செயலாளர் பகலவனை இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்கும் காவல்துறை உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது பாராட்டுதலுக்குரியதே.
எனினும் கட்சியின் நலன் மற்றும் மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு அவற்றின் அடிப்படையிலான கட்டுப்பாடுகளை மீறாமல் செயலாற்றுவது இன்றியமையாததாகும். அவ்வாறின்றி சிலர் பொதுவெளியில் நடந்து கொண்ட போக்குகள் கவலையளிப்பவையாக உள்ளன.எனவே,இதற்கு பொறுப்பேற்க வேண்டிய மாவட்ட செயலாளர் பகலவன் அவர்கள்.
மூன்று மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார். இது குறித்து முழுமையாக விசாரிப்பதற்கு மாநிலப் பொறுப்பாளர் ஒருவர் தலைமையில் விசாரணைக் குழு பின்னர் நியமிக்கப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். போராட்டத்தின் போது காவலர்களை இழிவாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தலைமறைவாக உள்ள பகலவனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.