
கோவையில் வெளுத்து வாங்கிய கனமழையால், பகலிலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் செல்லும் நிலை ஏற்பட்டது.
வெப்பச் சலனம் காரணமாக கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் இடையர்பாளையம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் பிற்பகலில் தினமும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வந்தது. அதன்படி இன்று கோவை மாநகரில் உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூர், ரயில் நிலையம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
மழையின் காரணமாக உக்கடம், கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் கருமேகங்கள் சூழந்து இருண்டதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.
உக்கடம், கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை மேம்பாலங்களுக்கு அடியில் நிறுத்திவிட்டு ஒதுங்கினர். அதே வேளையில் மேம்பாலங்களின் துளைகளில் இருந்து விழுந்த மழைநீர் தொடர், நீர் வீழ்ச்சிகள் போல் காட்சியளித்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...