
நிகழ்ச்சியில தூய்மை பணியாளர்களுக்கு குளிர்பானங்கள், கையுறைகளை வழங்கும் சேலம் மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன்.
சேலம்: தினமணி சார்பில் நடத்தப்பட்ட தாகம் தணிப்போம் நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறைகள், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
தினமணி, விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ், ஸ்ரீ சரவண பவன் குரூப், ஸ்பார்டா ஆகியவை இணைந்து, சேலத்தில் வெள்ளிக்கிழமை நடத்திய 'தாகம் தணிப்போம்' நிகழ்ச்சியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறைகள், குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்களை சேலம் மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன் வழங்கினார்.
கோடை வெயிலில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மைப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் வழங்கும் வகையில், 'தாகம் தணிப்போம்' நிகழ்ச்சியை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் கடந்த 2018 முதல் தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
சேலம் மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறைகள், குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்களை வழங்கினார்.
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை மண்டலங்களை சேர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறைகள், குடிநீர், குளிர்பான பாட்டில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் முதன்மையர் மருத்துவர் பி.செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
இதையும் படிக்க: செம்மொழி பூங்கா மலர்க் கண்காட்சி பற்றிய முக்கிய தகவல்கள்
இதில், சேலம் மாநகராட்சி கண்காணிப்புப் பொறியாளர் ஜி.ரவி, மாநகர நல அலுவலர் மருத்துவர் என்.யோகனந்த், மாநகராட்சி 30 ஆவது வார்டு உறுப்பினர் ஆர்.அம்சா மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தருமபுரி பதிப்பு வர்த்தகப் பிரிவு துணை மேலாளர் பா.பிரதேஸ், விற்பனை பிரிவு உதவி மேலாளர் வி.எஸ்.சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...