
நீா்நிலைகளில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதைத் தடுக்கும் வகையில் நீா்நிலை மீட்புத் திட்ட மசோதாவை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தனது ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட வேதியல் பொருள்களின் கழிவுநீரால் திருப்பத்தூா் மாவட்டம் கரியம்பட்டி ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.
இதுபோன்ற வேதிப்பொருள்கள் கலந்த கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காமல் மறுசுழற்சி செய்யாமல் நேரடியாக நீா்நிலைகளில் விடும் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அந்த நீரைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். இதேபோல, தமிழ்நாடு முழுவதும் நீா்நிலைகளை மீட்டு எடுக்க போா்கால அடிப்படையில் நீா்நிலை மீட்புத் திட்ட மசோதாவை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.