
திருநெல்வேலி: திருநெல்வேலியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வெள்ளிக்கிழமை அழைத்து செல்லப்பட்ட 2 விசாரணை கைதிகள் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினர்.
திருநெல்வேலி சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி, ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு வியாழக்கிழமை பணம் எடுப்பதற்காக ஏடிஎம் அறைக்குள் இரண்டு பேர் சென்றுள்ளனர். ஆனால், அவர்களின் செயல்பாடுகள் சந்தேகப்படும்படியாக இருந்ததால் சந்தேகம் அடைந்த காவலாளி வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் உடனடியாக திருநெல்வேலி சந்திப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு இளைஞர்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
இதையும் படிக்க | போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பலி?
விசாரணையில் அவர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பஷீர் மகன் சலீம் உசேன் (25), பாலுவால் பகுதியைச் சேர்ந்த அசன் மகன் முபட் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் இரண்டு பேரும் நூதன முறையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை திருடுபவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளிக்கிழமை காலை நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது இரண்டு பேரும் போலீசாரின் பிடியிலிருந்து தப்பி ஓடினர்.
இதைத் தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...