தாம்பரத்திலிருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
புறநகா் மின்சார ரயில்கள் ரத்து காரணமாக, தாம்பரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மாநகர போக்குவரத்துக் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஞாயிற்றுக்கிழமை (செப்.15) காலை 9 முதல் இரவு 7 மணி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் அனைத்தும் பல்லாவரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனால், தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் செல்லும் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதேபோன்று, தாம்பரத்தில் இருந்து தியாகராய நகருக்கு 20 பேருந்துகள், தாம்பரத்தில் இருந்து பிராட்வே பேருந்து நிலையத்துக்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலா்களை நியமித்து பேருந்து இயக்கத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.