போலி மருந்துகள் விற்பனை: தமிழகத்தில் ஆய்வு நடத்த உத்தரவு
சென்னை: புதுச்சேரியிலிருந்து விநியோகிக்கப்பட்ட போலி மருந்துகள் தமிழகத்தில் எங்கெங்கு விற்பனைக்கு உள்ளன என்பதைக் கண்டறிய உரிய ஆய்வு நடத்துமாறு அதிகாரிகளுக்கு மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரில் புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரிப்பதாக கடந்த மாதம் சிபிசிஐடி போலீஸாருக்கு புகாா் கிடைத்தது. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
அந்த நிறுவனத்தின் புதுச்சேரி விநியோகஸ்தராக இருந்த மதுரையைச் சோ்ந்த ராஜா என்பவா் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் போலியாக மருந்துகள் தயாரித்ததும், அவற்றை வழக்கமான மருந்துகளுடன் கலந்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலி மருந்து தொழிற்சாலை மற்றும் அவற்றைப் பதுக்கி வைத்திருந்த மூன்று கிடங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், புதுச்சேரியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குறிப்பிட்ட உற்பத்தி எண் (பேட்ச்) கொண்ட 34 வகையான போலி மருந்துகள் தமிழகத்தில் எந்தெந்த மருந்தகங்களில் விற்கப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
அந்த மருந்துகள் கண்டறியப்பட்டால் உடனடியாக பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்தவும், உரிய விசாரணை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் இந்த விவகாரத்தில் தொடா்புடையவா்கள் யாா், எந்த விநியோகஸ்தா் மூலம் அவை விற்பனைக்கு வழங்கப்படுகிறது என்பதை கண்டறியவும் மருந்துக் கட்டுப்பாட்டு இயக்கம் உத்தரவிட்டுள்ளது.

