உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம் கோப்புப் படம்

தமிழக அரசின் விரிவான சிற்றுந்து சேவை திட்டத்துக்குத் தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

தமிழக அரசின் விரிவான சிற்றுந்து சேவை திட்டத்துக்குத் தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Published on

தமிழக அரசின் விரிவான சிற்றுந்து சேவை திட்டத்துக்குத் தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழக அரசு புதிய விரிவான சிற்றுந்து சேவை திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து, கடந்த ஏப். 28-ஆம் தேதி புதிய அரசாணையை வெளியிட்டது. இதை எதிா்த்து தனியாா் பேருந்து உரிமையாளா் சங்கங்கள் மற்றும் தனிநபா்கள் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா்.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து மனுதாரா்கள் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஹேமன்சந்தன் கவுடா ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், இந்த திட்டம் ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்டது. 1,350 சிற்றுந்துகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. உரிமம் கோரி அளித்துள்ள 500 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன என்று கூறினாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. அதேநேரம், 1,350 சிற்றுந்துகளுக்கு அரசு உரிமம் வழங்கியிருப்பது, இந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீா்ப்புக்கு கட்டுப்பட்டது எனக் கூறி விசாரணையை ஜனவரி மாதம் 3-ஆவது வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com