சிவகிரி அருகே உடல் நலக் குறைவால் அவதி: நலமாகி வனத்துக்குள் சென்ற யானை!
தென்காசி மாவட்டம், சிவகிரி வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யானை தொடா் சிகிச்சையை அடுத்து சனிக்கிழமை வனப்பகுதிக்குள் சென்று விட்டதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.
தென்காசி வனக்கோட்டம், சிவகிரி வனப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் சுற்றித் திரிந்து படுத்து கொண்டிருந்த யானையை தனிக் குழுவினா் கண்காணித்து வந்தனா். இதில், தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் உடல் நலமின்றி யானை படுத்திருந்தது கடந்த 2 ஆம் தேதி தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி கள இயக்குநா் அருண் உத்தரவின்பேரில், தென்காசி மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன் முன்னிலையில் திருநெல்வேலி வன கால்நடை மருத்துவா் மனோகரன், சாந்தகுமாா் அடங்கிய மருத்துவக் குழுவினா் யானைக்கு சிகிச்சை அளித்தனா்.
எழுந்திருக்க முடியாமல் தவித்த யானை கிரேன் உதவியுடன் நிற்கவைக்கப்பட்டு அதற்கு வெள்ளிக்கிழமை வரை சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், யானைக்கு உணவாக கேப்பையும் கருப்பட்டியும் கலந்த உருண்டைகள் தயாரிக்கப்பட்டு யானையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வனத் துறையினா் வைத்தனா்.
சிவகிரி வனச்சரகா் கதிரவன், வனவா் பிரகாஷ், வனக் காவலா்கள் மாரியப்பன் ,ஆனந்த் வேட்டை தடுப்பு காவலா்கள் சரவணன் ,பாலசுப்பிரமணியம், யோகநாதன், வனக்காப்பாளா் அருண்மொழி பிரதீப் உள்ளிட்ட வனத் துறையினா் இரவு பகலாக யானையை கண்கணித்து வந்தனா்.
இந்நிலையில் சனிக்கிழமை யானையின் உடல் நலம் சீராகி மெதுவாக நடந்து பெரிய ஆவுடைப்பேரி குசவல் காட்டுப் பகுதிக்குள் சென்றதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் கடந்த நான்கு தினங்களாக வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாயிகள் மத்தியில் நிலவி வந்த பரபரப்பு தணிந்தது.
