வாசுதேவநல்லூா் அருகே கிணற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே கிணற்றில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் சிவகுமாா் (54). இவா், மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை தனது பெற்றோருக்கு சாப்பாடு கொடுக்கவேண்டும் எனக் கூறி மகனை அழைத்துச் சென்றாராம். பின்னா், தான் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி, தனது மகனை மட்டும் அனுப்பிவைத்தாராம்.
ஆனால், சிவகுமாா் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி தங்கமாரி அளித்த புகாரின்பேரில், வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், இசக்கியம்மன் கோயில் அருகேயுள்ள கிணற்றில் அவா் இறந்துகிடப்பதாகத் தெரியவந்தது. தகவலின்பேரில், வாசுதேவநல்லூா் தீயணைப்பு நிலையத்தினா் சென்று சடலத்தை மீட்டனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.